சேஷாத்திரி சுவாமிகள்

Wednesday 16 November 2011

சேஷாத்திரி சுவாமிகள்


சேஷாத்திரி சுவாமிகள்:ஆதிகுருவாகிய சங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சிதேவியை அமைத்து, காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870, ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில், உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நடந்தது. பிறந்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது, ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார். வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி, இந்த குழந்தைகயின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான். அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார். சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார். சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார். ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார். சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள்.
தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். சில நாட்களில், தாயார் சேஷாத்ரியை அழைத்து, பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு. அருணாசல, அருணாசல, அருணாசல என்று 3 முறை உருக்க கூவிவிட்டு மகளின் மகனின் மடியில் இயற்கை எய்தினார். தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டுது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு, ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து, பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார். சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை. உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர். 19வது வயதிலேயே உபாசனையும், வைராக்கியமும் மிகுந்த நிலையை மேற்கொண்டு எல்லாவற்றையும் துண்டித்து துறவியாகி, காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு, ஞானவித்தையை உலகெல்லாம் பரப்ப, அந்த ஞான தபோதனார் அண்ணாமலை நோக்கி வந்தார். தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார். வந்த உடனே கிரிபிதட்சணம் போனார். கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். அங்கு அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார்.
பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார். ஓடுவார். வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார். தீயவர்களை வசைமாரி பொழிவார். எந்த பெண்ணைக் கண்டாலும், என் தாய் என்று சொல்லி வணங்குவார். தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார். அல்லது தியானத்தில் இருப்பார். பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சிதந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும், கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும். எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும். தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார். ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி சுவாமிகள், திருப்புகழ்தான் மந்திரம் என்று வன்னிமலை சுவாமிகளுக்கு உபதேசித்து, அவர் மூலம் திருப்புகழ் தமிழெங்கும் பரவச்செய்தார். 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி, மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார். சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது. இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. செங்கம் சாலை மலையடிவாரத்தில் சமாதி வைக்கப்பட்டார். இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

0 comments :

Post a Comment