Tuesday 25 September 2012



அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்,நாமக்கல்



சுவாமி : ஸ்ரீ ஆஞ்சநேயர்
பிறபெயர் : பக்தஆஞ்சநேயர்
பிரம்மாண்டம் : சிலை
உயரம் : 22 அடி
பீடம் : 4 அடி
கோபுரம் : இல்லை
ஊர் : நாமக்கல்
புராணபெயர் : ஸ்ரீசைலஷேத்ரம்
பிறபெயர் : நாமகிரி
மாவட்டம் : நாமக்கல்


பிரார்த்தனை

* இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை,நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

*நவக்கிரக தோஷம் நீங்குதல் : இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.



நேர்த்தி கடன்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல் , எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடைமாலை சாத்துதல், பூமாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிற்ப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

வடைமாலை சாத்துவது ஏன் ? : முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.



கோயிலின் சிறப்பம்சம்

சிலை அமைப்பு

மிக பிரம்மாண்டமாக காற்று , மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்

கோபுரம் இல்லாதது ஏன் ? : லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்



தல பெருமைகள் :

*இங்குள்ள ஆஞ்ச நேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

*இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

*திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் இருக்கும் சன்னதி இது.

*தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோயில்.

*எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

*இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இது.

*இங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.



தல வரலாறு :

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி வரும்போது நாமகிரித்தாயாரிடம் இதை கொடுத்த விட்டு ராமஜெபம் செய்கிறார்.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதை கீழே வைத்து விடுகிறார். ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கையில் சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது.அதை அசைக்ககூட முடியவில்லை.அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம கோலத்தில் காட்சி தந்து ராமருக்கு நீ பணிவிடை செய்துவிட்டு என்னை தொழ வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய காரியங்களை செய்து கொடு என்று கூற அதுபடியே இங்கு ஆஞ்சநேயர் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

முக்கிய திருவிழாக்கள்

*மார்கழி மாதம் அம்மாவாசை அனுமத் ஜெயந்தி அன்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

வாரத்தின் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் கூட்டம் மிக அதிக அளவில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. தீபாவளி,பொங்கல், கிருஷ்ணஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு தினங்கள் ஆகிய வருடத்தின் முக்கிய விசேஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் மிக அதிகஅளவில் இருக்கும்.



பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாமக்கல் பேருந்து நிலையத்தி லிருந்து 1.5 கி.மீ.தூரம் மட்டுமே தங்கும் வசதி : குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாமக்கல் நகரில் தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.

கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை.

போக்குவரத்து வசதி : *நாமக்கல் நகர பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நகருக்குள்ளேயே கோயில் இருப்பதால் எளிதில் கோயிலை அடையலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர்
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி

0 comments :

Post a Comment